12 February 2014

காலநிலை மாற்றத்தினை குறைக்க உள்ளுர் சமூக ரீதியாக செய்யக்கூடிய நடவடிக்கைகள்

SHARE
இன்று மனிதன் பல தொழில்நுட்பத்துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் மனித சமூகத்துக்க சவாலாக அமைகின்ற விடயம்
சூழலியல் மாற்றங்களாகும். அதாவது குறிப்பாக காலநிலை மாற்றத்தினை கூறலாம். இதற்கு காரணம் மானிட நடவடிக்கைகளே எனலாம். நாம் அன்றாடம் எமது வாழ்வாதார நடவடிக்கைகளை கொண்டு செல்லும் பொருட்டு அறிந்தும் அறியாமலும் சூழல் மாசடையக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம்.

    'காலநிலை மாற்றம் என்பது உலக ரீதியாகவோ அல்லது பிரதேச ரீதியாகவோ பத்து வருடம் அல்லது அதற்கு அதிகமான காலப்பகுதியில் புள்ளி விபர ரீதியாக காலநிலை மூலக்கூறுகளான படிவுவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று முதலானவற்றில் ஏற்படுகின்ற மாற்றமாகும்'.

    காலநிலை மாற்றத்துக்கான பல விளைவுகளை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதனடிப்படையில் பருவகாலங்கள் மாற்றமடைதல், மழை வீழ்ச்சியில் மாற்றம், வெப்பநிலை அதிகரிப்பு, முனைவுப் பனிமற்றும் உயர்மலைப்பனி உருகுதல் செயற்பாடுகள், கடல்மட்ட சராசரி வெப்பநிலை உயர்வடைதல், பல்வேறு நோய்களின் தாக்கம், அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்படல், போன்றவற்றை குறிப்பிட முடியும்.

தனி மனிதன் தொடக்கம் பாரிய கைத்தொழில் நிறுவனங்கள் வரை இன்று சூழல் மாசாக்கத்திலும், காலநிலை மாற்றத்திலும் பங்கு கொண்டுள்ளன.

நாம் பாரம்பரியமாக செய்து வந்த விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு இன்று புது வகையான அதாவது நவீன விவசாய முறைமைக்குள் புகுந்து கொண்டிருக்கின்றோம். விறகுத் தேவைகளுக்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் காடுகளை வெட்டி அழிக்கின்றோம். நாம் வீட்டுப்பாவனைக்காக குளிர்சாதனப்பெட்டிகளையும், குளிரூட்டிகளையும் பயன்படுத்துகின்றோம். அது மட்டுமன்றி எம்மை அழகுபடுத்த பலவகையான இரசாயனப்பதார்த்தங்களைக் கொண்ட வாசனைத்திரவியங்களையும் பயன்படுத்துகின்றோம்.
   
    அதுமட்டுமன்றி இன்று அனைவரும் விரும்புவது பிரயாணம் செய்வதற்காக தனியார் வாகனங்களையே. இதன் காரணமாக அனேகமான வீடுகளில் இன்று முற்சக்கர வண்டிகளும், ஈருருளிகளும் (மோட்டார் சைக்கிள்) பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி அன்றாட வீட்டுப்பாவனைக்காக அதிகளாவான பொருட்களை நுகர்ந்து அதன்காரணமாக அதிகளவான திண்மக்கழிவுகளும் எம்மால் சூழலுக்கு சேர்க்கப்படுகின்றன.  மேலும் நாம் அவற்றை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதுமில்லை.

    வீட்டுப்பாவனைக்காக அதிகளவான வெப்பத்தினை வெளியிடக்கூடிய மின்குழிழ்களை பாவிக்கின்றனர். மேலும் அதிகளவான கழிவுகளை அதாவது பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை சரியான முறையில் முகாமைத்துவம செய்யாமல் அவற்றை எரித்தல் போன்ற நவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமன்றி சூழலில் காணப்படும் சில தாவரங்களை காரணமேயில்லாமல் வெட்டியழிக்கின்றனர்.

    மேற்காட்டப்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாகவும் சூழலுக்கு தெரிந்தும், தெரியாமலும் காலநிலை மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாகவுள்ளது. இதன் விளைவுகளை உடனடியாக அநுபவிக்காவிடினும் காலப்போக்கில நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  எனவே சமூத்தில் வாழும் அங்கத்தவர்கள் என்றவகையில் அனைவரும் காலநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த அல்லது குறைக்க கடப்பாடுடையவர்களாகின்றனர். எனவே எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக நாம் இதனை மேற்கொள்ளலாம் என பின்வருமாறு பார்ப்போம்.

    சமூக அங்கத்தவர்கள் என்றவகையில் சமூக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் அரசுகள் மூலமாக விடுக்கப்படும் சூழல் தொடர்பான  விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கேற்ப நாமும் செயற்பட்டுக்கொள்ள வேணடும். இதன் மூலம் அனைத்து சமுதாயமும் விழிப்படைந்து கொள்வதுடன இவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் சூழலுக்கு பெரும்பாலும்  தீங்கு விளைவிக்காமல் இருக்கும். மேலும் சூழல் தொடர்பான சட்டதிட்டங்களுக்கு அனைவரும் மதிப்பளித்து செயற்பட வேண்டும்.

    நாம் பல விழாக்களையும் பண்டிகைகளையும் கொண்டாடுகின்றோம். அத்தினங்களின் நினைவாகவும், சூழலுக்கு நன்மை செய்யும் முகமாகவும் மரங்களை நட்டு அத்தினங்களை கொண்டாடலாம். அதாவது பிறந்ததின கொண்டாட்டங்கள், திருமண நிகழ்வுகள், நினைவு தினங்கள், மேலும் பல நிகழ்வுகளை உதாரணமாகக் கூறலாம். மேலும் நாம் எமது சூழலை அழகாகவும், சுத்தமாகவும் பேணும் பொருட்டு வெறுமனே காணப்படும் இடங்களிலும் மரங்களை நடலாம். ஏனையோரையும் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம்.
   
    முடிந்தவரை நாம் ஆடம்பர வாழ்கைக்காக பயன்படுத்தும் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படும் பொருட்களின் பாவனையை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும். உதாரணமாக குளிர்சாதனப்பெட்டிகள், குளிரூட்டிகள், வாசனைத்திரவியங்கள், போன்றவற்றின் பாவனையை இயன்றவரை குறைக்க வேண்டும். மேலும் நாம்     CFL மின்குழிழ்களை பாவிக்க வேண்டும்.

    அன்றாடம் எமது வீட்டில் வெளியேறும் கழிவுகளை நாம் உரியமுறையில் முகாமைத்துவம் செய்து வெளியேற்ற வேண்டும். அதாவது வீட்டில், வர்த்தக நிறுவனங்களில் சேருகின்ற கழிவுகளை குறிப்பாக பிளாஸ்டிக், இறப்பர் போன்றவற்றாலான கழிவுகளை நாம் மீள் உற்பத்தி. மீள்சுழற்சி போன்ற நடவடிக்கைகளுக்காக கொடுக்கலாம். மேலும் அவற்றை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. வீட்டில் சேரும் தாவரக்கழிவுகளை புதைக்கலாம்.

    எமது பிரயாணங்களுக்காக அதிகமாக தனிப்போக்குவரத்து முறைகளை குறைத்து  பொதுப்போக்குவரத்து முறையை பெரிதும் பயன்படுத்தலாம். மேலும் நாம் பாவனை செய்யும் வாகனங்கள் சூழலுக்கு உரிய முறையில் தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதனை அவதானித்து அவற்றினை கொள்வனவு செய்ய வேண்டும். மேலும் நாம் பயன்படுத்தும் வாகனங்களை அடிக்கடி சூழல் பரிசோதனை செய்யவும் வேண்டும்.

    எமது தேவைகளுக்காக கொள்வனவு செய்யும் பொருட்களால் சூழலுக்கு தீங்கு ஏற்படுமா என்பதனை அவதானித்தே அப்பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும். எமது விறகுத்தேவைகளுக்காக பச்சைத்தாவரங்களையோ, பெறுமதியுள்ள தாவர வகைகளையோ வெட்டுவதனை தவிர்க்க வேண்டும். மாறாக காய்ந்த (பட்ட) மரங்களையே விறகுத்தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டும். மேலும் மரங்களை வெட்டி வேலிகள், குடிசைகள் அமைப்பதற்கு பதிலாக சீமந்தாலான தூண்களைக் கொண்டு பயன்படுத்தாலம்.

    மேற்கூறப்பட்டவாறு பல நடவடிக்கைகளை நாம் எமது  சமூக ரீதியாக மேற்கொள்வதன் மூலம் எம்மாலும் காலநிலை மாற்றத்தினையும், சூழல் மாசாக்கத்தினையும்  குறைக்க முடியும்.

ஆக்கம் 


        அ.பிரசாந்தன்
கிழக்குப் பல்கலைக்கழகம்
SHARE

Author: verified_user