கடந்த சில தினங்களாக குடும்பிமலைப் பிரதேசங்களில் தொடர்ச்சியான வெடிச்சத்தங்களும், இன்றைய தினம் பெருமாவெளி போன்ற பிரதேசங்களில் இராணுவத்தினரின் உலங்குவானூர்திகள் வட்டமிட்டதாலும் , மேலும் அவசரக்காவி வண்டிகள் பலவும் பயணம் செய்தமையாலும் சில பொதுமக்கள் அச்சமடைந்திருந்தனர். இலங்கை இராணுவத்திரின் பயிற்சி நடவடிக்கைகள் காரணமாகவே இத்தகைய வெடியோசைகளும், உலங்குவானுர்திகளின் பிரசன்னமும் காணப்படுகின்றது.
இலங்கை முப்படையினரும் இனைந்து மேற்கொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சியான “நீர்க்காகம் – 4” கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பிரதேசங்களான மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, கதிரவெளி, திருகோணமடு, தொப்பிகல, நரக்கமுல்லை பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.
11ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரையான 13 நாட்கள் நடக்கவுள்ள இந்தப் போர்ப்பயிற்சியில், இலங்கையின் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 2698 படையினரும், 40 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப் போர்ப்பயிற்சியில் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் சிறப்புப் படைப்பிரிவுகளும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் சிறப்புப்படைப்பிரிவுகளும் பங்கேற்கவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிறேசில், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 படையினரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இப் பயிற்சிக்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக செய்து கொடுத்ததுடன் இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் இந்தப் போர்ப்பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.
இந்த ஆண்டு பயிற்சிகளில் படகுத்துறைகள் மீதான தாக்குதல், உயர்பெறுமான இலக்குகள் மீதான தாக்குதல், வேவு, இலக்குகள் கண்காணிப்பு, வான்வழி நடவடிக்கைகள், கடல்வழி நடவடிக்கைகள், கடல்வழித் தரையிறக்கம், வழி கண்டறியும் குழுக்கள், எதிரியின் கோட்டைகளில் பராசூட் மூலம் குதித்தல், பதுங்கித் தாக்குதல்கள், தேடுதல் நடவடிக்கைகள், தீவிரவாத முறியடிப்பு மற்றும் பிணைக்கைதிகள் மீட்பு, உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

