24 December 2012

அடுத்துவரும் சில நாட்களுக்கு கனத்த மழை பெய்யும்!- வளிமண்டலவியல் திணைக்களம்

SHARE
அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் பபோதினி கருணாபால நேற்று தெரிவித்தார்.

இலங்கைக்கு கிழக்காக வளி மண்டலத்தில் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதால், மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி வவுனியாவில் 225.7 மில்லி மீற்றர்கள் மழை பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை காரணமாக வடக்கு, கிழக்கு வடமத்தி, மத்தி, ஊவா மாகாணங்களுக்கும், அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் மேலும் அதிகரித்த மழை கிடைக்கப் பெறும்.
இதேநேரம், மன்னார் குடா, மேற்கு, தென், தென்கிழக்கு, கிழக்கு கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பு நிலையையும் அடைகின்றது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற மழை வீழ்ச்சி பதிவுப்படி அநுராதபுரத்தில் 130.6 மி. மீ., பொலனறுவையில் 119.0 மி. மீ. என்றபடி அதிக மழை பதிவாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 60 ஆயிரத்து 784 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 22 ஆயிரத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 5 ஆயிரத்து 25 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 168 பேர் 100 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 3 ஆயிரத்து 136 வீடுகள் முற்றாகவும் 7 ஆயிரத்து 694 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
SHARE

Author: verified_user