25 April 2013

பெற்றோரைக் கொல்வதற்கு டோர்ச் லைட் பிடித்த மகள் - பூஜித ஜெயசுந்தர

SHARE
10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தனது தாயையும், தந்தையும் வெட்டிக் கொலை செய்வதற்கு மகள் ‘‘டோர்ச் லைட்’’ பிடித்துக் கொண்டிருந்த கொடூரமான சம்பவம் இலங்கையில் செங்கலடி பிரதேசத்தில் தான் இடம் பெற்றுள்ளது என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கூறினார்.
ஏறாவூர். மட்டு. அலிகார் தேசியப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் வைபவம் பாடசாலை முன்றலில் நடைபெற்ற போது இவ் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


பாடசாலை அதிபர் எஸ்.ஏ.நஜீப் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
செங்கலடி மத்திய கல்லூரியில் 11ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது 6வது காதலையாவது நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு தனது தாயையும் தகப்பனையும் வெட்டிக் கொலை செய்வதற்கு உறுதுணையாக இருந்த சம்பவத்தினை யாவரும் அறிந்ததே.

இம் மாணவி மிகவும் அழகானவர், படிப்பிலும் ஏனைய புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் மிகவும் திறமையானவர்.

ஏற்கனவே 5 பேரை காதலித்துள்ளார். இக் காதலுக்கு தாயும் தகப்பனும் பலமான எதிர்ப்பினைக் காட்டியுள்ளனர். இப்போது 16வது வயதில் 11ம் தரத்தில் கல்வி கற்ற இம் மாணவி 6வது நபரைக் காதலித்துள்ளார். இந்தக் காதலையாவது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று காதலனோடு சேர்ந்து பல திட்டங்களை தீட்டியுள்ளார்.

இதற்கமைய தனது காதலை நிறைவேற்றிக் கொள்வதற்காக தாயையும் தகப்பனையும் வெட்டிக் கொலை செய்யுங்கள் என்று இவர் காதலனிடம் கூறியுள்ளார்.

இத் திட்டத்திற்கமைய ஏறாவூர் மற்றும் செங்கலடி வைத்தியசாலைகளுக்கு சென்ற குறித்த காதலனும் நண்பர்களும் தங்களுக்கு நித்திரை இல்லை நித்திரை செய்வதற்கு நித்திரை குளிசை தாருங்கள் என்று கேட்டு 21 குளிசைகளை இவர்கள் பெற்றுள்ளார்கள்.

புதுவருடத்திற்காக நாங்கள் உடுதுணி வாங்க மட்டக்களப்புக்குச் செல்கிறோம். நீங்கள் வீட்டின் ஜன்னலில் வைத்துள்ள திறப்பை எடுத்து உள்ளே சென்று கறிச் சட்டிக்குள் நித்திரை குளிசைகளை போடுங்கள் என்று காதலனிடம் மகள் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் உடுதுணிகளை வாங்கச் சென்ற தாயும், தகப்பனும் பசியுடன் வீட்டிற்கு வந்து நன்றாக சாப்பிட்டு விட்டு நித்திரை செய்து விட்டனர். வீட்டில் அனைத்து மின் குமிழ்களும் அணைக்கப்பட்ட நிலையில் வீட்டிற்குள் நுழைந்த மூன்று இளைஞர்களும் தாயையும் தகப்பனையும் வெட்டிக் கொலை செய்யும் போது டோர்ச் லைட்டை பிடித்துக் கொண்டு அப் பெண் பிள்ளை நின்றுள்ளார்.

இந்த மனநிலை யாருக்கும் வராது வரவும் கூடாது.

10 மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயையும் தகப்பனையும் தன் முன்னே வெட்டிக் கொலை செய்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்ன மனநிலை இது.

ஆதலால் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒழுக்க விழுமியங்களோடு நல்ல தலைமைத்துவ பண்புடனும் மனிதாபிமானத்துடனும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும். அதற்கு நல்ல தலைமைத்துவ பண்புகள் தேவை. அதனைக் கற்றுக் கொள்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.

இன்று பார்க்கின்ற போது நல்ல தலைமைத்துவமும் திட்டமிட்ட முகாமைத்துவமும் எமக்கு தேவைப்படுகின்றது.

இப் பாடசாலையில் மாணவத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களிடத்திலும் மனித நேயத்தன்மையுடன் முகாமைத்துவமும் மிக அவசியமாகும். சொல்வதை செய்ய வேண்டும் செய்வதை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் முன்மாதிரியான மாணவர்களாக திகழ வேண்டும் என்றார்.

SHARE

Author: verified_user