03 November 2014

வங்காளவிரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்க மண்டலம்

SHARE
இலங்கையின் வடகிழக்குப் பகுதியல் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பம் காரணமாகவும், தென்கிழக்கு வங்காளவிரிகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு தாழமுக்க பிரதேசம் காரணமாகவும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை அதிகமாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கியமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் மழை காணப்படும். சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளைகளிலும் மழை காணப்படலாம்.

இந்த தாழமுக்க பிரதேசமானது அடுத்த 24 மணித்தியாலத்தில் மேலும் வலுவடையலாம் என எதிர்பாரக்கப்படுகிறது. அவ்வாறு அது வலுவடைந்து சூறாவளியாக உருவாகும் சந்தர்ப்பத்தில் இதற்கு இலங்கையினால் பிரேரிக்கப்பட்ட 'பிரியா' எனும் பெயர் சூட்டப்படும்.


கடல் பிராந்தியங்களுக்காக வானிலை முன்னறிவிப்பு

இலங்கையின் கிழக்கு கடல் பகுதிகளில் இடையிடையே மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். ஏனைய கடல் பிராந்தியங்களில்கூட மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படலாம். வங்காளவிரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்க பிரதேசம் காரணமாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான காலி வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கலாம். இதனால் இக்குறிப்பிடப்பட்ட கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்.
SHARE

Author: verified_user