13 May 2013

வடக்கு நோக்கி நகரும் மகாசென் தாழமுக்க புயல்

SHARE
முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ தாழமுக்கம் மேலும் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் தற்போது மணித்தியாலத்திற்கு 10-20 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கும் இத்தாழமுக்கம் வடகிழக்காகி பங்களாதேஷையோ அல்லது மியன்மாரையோ ஊடறுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கிழக்கு கடலில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இத்தாழமுக்கத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படாது. என்றாலும், அடிக்கடி காற்றின் வேகம் அதிகரிக்கும்.
மேல், சப்ரகமுவ, மத்தி ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும், என்றாலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாலை வேளையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மினி சூறாவளி வீசியுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கான முன் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் ஆரம்பித்த இடி, மின்னல், மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை அம் மாவட்டத்தில் தற்போதும் தொடர்கிறது.
யாழ்ப்பாணத்திலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது.


SHARE

Author: verified_user